பங்காளிங்க..

Thursday, September 29, 2011

உன் மனைவி என் காதலியாக முடியாது???

ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? சமீபத்தில் எனது நண்பன் எனக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல்....அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.

தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.

இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா...அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா? யார் இதை வெளியிட்டது...அந்த பெண்ணின் சகோதரரா? அந்த பெண்ணா? அந்த பெண்ணின் தோழிகளா? அல்லது தோழர்களா? அல்லது யாரென்றே தெரியாத முகம் தெரியா நபரா? அந்த பெண்ணின் கணவரா? அல்லது காதலரா?

அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா? 

இவள் ஒரு மாடல் என்று வைத்து கொள்வோம்...ஒரு மாடல் என்பவள் ஒரு திருமண வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அடுத்த வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள இயலாது. ஒருவேளை நிஜமாகவே இவளுக்கு வரன் தேடுவதாக இருந்தால் ஏன் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற வேண்டும். சோசியல் நெட்வொர்க் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியமாகின்றது. மீதி எல்லோருமே கடமைக்கு ஒரு கணக்கு துவக்கி செயல்படுத்தி வருகின்றார்கள். இரண்டு ரூவாய் கொடுத்து தினகரன் பேப்பர் வாங்க வைக்க 3 பொருட்களை இலவசமாக கொடுத்தார்கள்.

அப்படி எனில் உங்களிடம் இருந்து எவ்வளவு கொள்ளை அடிக்க இந்த சோசியல் நெட்வொர்க் தளங்கள் விற்கப்படுகின்றது என்பதை சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள்.

விசயத்திற்கு வருவோம்...இந்த பெண்ணிற்கு இது சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா? இந்த பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? இவளே கால் கேள் ஆகவும் வருகின்றாள், இவளே திருமண மணப் பெண்ணாகவும் வருகின்றாள். எதுதான் நிசம்? அல்லது இவள் ஒரு வியாபாரப் பொருளா? 

ஒருவேளை இந்த மேட்ரிமோனி நடத்தும் வியாபாரிகள் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு நம்மை எல்லாம் ஏமாற்றுகின்றார்களோ அல்லது இப்படித்தான் எல்லா பெண்களின் புகைப்படங்களையும் வெளியிடுகின்றார்களா? இப்படி எத்தனை பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த எத்தனை அப்பாவி இளைஞர்களிடம் இருந்து பணம் பிடுங்கி இருக்கின்றார்களோ, தெரியவில்லையே?

ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.

இதை பற்றி எனது நண்பனிடம்  கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன்...டேய் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு போன் பண்ணி சொல்றியாடா? அப்படியே படத்தை பார்த்தோமா, ஜாலியா ரசிச்சோமானு போயிட்டே இருக்கணும்னு சொன்னான். மிகவும் வலித்தது,. இரண்டு நாளுக்கு முன்னாள் அவனது தங்கையின் புகைப்படத்தை  பேஸ்புக் இணையத்தில் பார்த்து விட்டு வானத்திற்கும், பூமிக்குமாய் குதித்தான். இதை போட்டவர்கள் மீது கோர்டுக்கு போவேன், அல்லாரையும் பிடிச்சு உள்ளே போடுவேன் என்று கத்தி கொண்டிருந்தான்.. மெல்ல அவனிடம் போய் டேய், இதெல்லாம் ஜாலியா ரசிச்சுகிட்டு போய்க்கிட்டே இருக்கனும்டா என்று அவன் சொன்ன வசனத்தையே அவனுக்கு திருப்பி சொன்னேன்..எதுவுமே பேச வில்லை. இப்போது அவன் இந்த செய்தியை யாரைப் பார்த்தாலும் தீவிரமாய் சொல்லிக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றான். தனக்கு வந்தால் அது வலி, அடுத்தவர்களுக்கு வந்தால் அது ஜாலியா?  

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது...இல்லேனா மருவாதை கெட்டிடும்.

வேதனைகளோடு
மின்சாரம். 
























Tuesday, September 27, 2011

அந்த மேட்டருக்கு போறீங்களா...உசார்..

இதுக்கு முன்னாடி நீ எங்கே வேலை செஞ்சே?
 
துபாயா, பஹ்ரைனா, அபுதாபியா , என்று குசலம் விசாரிக்கும் இளைஞர்களே, நீங்கள் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு செல்லும் போது ஒரு விஷயம் நன்கு நினைவில் கொள்ளுங்கள்..அங்கே சட்ட திட்டங்கள் மிக பயங்கரமாய் இருக்கும்...அது இந்தியா போன்று பணம் இருப்பவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுக்காது என்பது பலருக்கு இன்னமும் புரியாத புதிர்தான்.
 
 
சமீபத்தில் எனது நண்பரின் தூரத்து உறவினர் யுஏஈ பயணமானார். அவருக்கு ஒப்பந்த பிரிவில் சமையல்காரர் பணி கிடைத்தது. அதிகம் படிக்காதவர் என்பதால் அவருக்கு அங்கே இருக்கும் சட்ட திட்டங்களை பற்றிய அக்கறை இல்லை. அடுத்தது அங்கே இருக்கும் தனது முதலாளி பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ஆயிரம் கனவுகளோடு புறப்பட்டு விட்டார்.

தான் ஒரு மிகப் பிரபலமான சமையல்காரர் என்பதால் முதலாளியை அசத்துவதற்காக பல விதமான சமையல் குறிப்புகளையும், சமையலுக்கு தேவையான உபகரணம் மற்றும் வாடிக்கையாளர்களை மயக்கும் சில உணவுப் பொருட்களையும் எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டார்.

அவருக்குள் ஆயிரம் கனவுகள்...வித விதமாய் உடைகள் வாங்கலாம், முக்கியமான இடங்களில் சென்று புகைப்படம் எடுத்து ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக சிக்கனமாய் செலவு செய்து பணம் சேமித்து இந்தியா திரும்பும்போது அருமையான கடை ஒன்றை வைக்க வேண்டும். என்னென்னவோ கனவுகள்....இதை விட மேலானது ஒரு முறையாவது ஒரு துபாய் பெண்ணோடு உடலுறவு வைத்து கொண்டு பரம திருப்தி அடைய வேண்டும். எத்தனை முறை "அந்த" படம் பார்த்திருக்கின்றோம்...நாமும் அதனை அனுபவிக்க வேண்டும். தனது நண்பர்களிடம் எல்லாம் அதை பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும், 
 துபாய் சேக்கு டிரெஸ் வாங்கி போட்டு தனது தெருவில் உள்ள நண்பர்களுக்கு காண்பிக்க வேண்டும், அங்கே இருக்கும் விலை உயர்ந்த மதுபானம் குடிக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனயோ கனவுகளோடு விமானம் ஏறினார். துபாய் விமான நிலையம் சென்றதும் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது,.

அவரது உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அத்தோடு மட்டுமல்லாமல் 20  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்றார். அவருக்கு நம்மூர் திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படுவது போல் என்ன காரணத்திற்கு கைது செய்யப்படுகின்றோம் என்று கூடத் தெரியவில்லை.

அப்போது அவரை வரவேற்க காத்திருந்த அந்த ஊர் ஒப்பந்தக்காரர் சிறையில் சென்று விசாரித்தார்..அப்போதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. அவர் கொண்டு சென்ற பொருட்களில் நம்மூரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கச-கசா என்ற சமையல் பொருள் இருந்தது. காரணம் என்னவெனில் துபாய் போன்ற அரபு நாடுகளில் கச-கசா தடை செய்யப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல..கச-கசா, பாண், பீட்டில் நட் என்றழைக்கப்படும் சுபாரி, பாண் பராக் போன்ற பொருட்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. மீறி அதை கையில் வைத்திருந்தாலோ, சுவைத்தாலோ அவர்களுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகின்றது.
அந்த ஒப்பந்தக்காரரும், அந்த ஊர் முதலாளியும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் பயனில்லை. இறுதியாக இந்த  20 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு மாற்றாக அந்த நீதிபதிகள் அபராதம் விதித்தனர். அந்த தொகை AED.100,000 அதாவது இந்திய தொகைக்கு அது 13 ,511 ,24 .8 ரூவாய் ஆகும். அவர் சம்பாதிக்க சென்றதே வெறும் 1 லட்சம் ரூவாய்தான். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொகை 12  மடங்கு அதிகம். இந்த தொகையை கட்டி விட்டு மீட்டு செல்லலாம் என்று அறிவித்து விட்டது. 
 

26 வயதில் அங்கு சென்று விட்டு 46 வயதில் நாடு திரும்ப போகின்றாரா? அல்லது என்ன செய்வது என்று தலையை பிச்சி  கொண்டிருக்கின்றார்கள். ஆகவே ஒப்பந்தக்காரர்கள் இதை போன்று படிக்காதவர்களை அழைத்து செல்லும் போது முதலில் அங்குள்ள சட்ட திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை கொடுத்து அழைத்து செல்லல் வேண்டும். இல்லையேல் அந்த நண்பருக்கு ஏற்பட்ட கதிதான் மற்றவர்களுக்கும்.

இதில் பொதுவாக யார் அதிகம் சிக்குவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.? அதிகமாக நம்மூர் தாய்மார்கள்தான் சிக்குவார்கள். ஏனெனில் மகளை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்தவர்கள் அங்கு மகளின் பிரசவத்திற்கு செல்லும் போது தனக்கு சமையலுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று கச-கசா, அஜினோமோட்டோ, புளியோதரை மிக்ஸ், சாம்பார் மிக்ஸ், மிளகாய் பொடி, காப்பி பொடி, ஊறுகாய் பொட்டணம் என்று மகளுக்கு பிடிக்குமே என்று வகை வகையாய் எடுத்து செல்வார்கள். அது ஒருவேளை உங்கள் வீடுகளில் நடக்கலாம், அல்லது நமது நண்பர்கள் வீடுகளில் நடக்கலாம்...நம்மால் முடிந்தால் அவர்களுக்கு இதை எடுத்து சொல்லி அவர்களை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றலாமே...
 

அங்கே சட்டத்தில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வயதான ஆண், பெண் என்று எவரையும் விட்டு வைக்க மாட்டார்கள்...அது என்ன இந்தியாவா? தயாளு அம்மாள் வயதானவர் என்று பாவம் பார்த்து விட்டு வைக்க, அது அரபு நாடு, அங்கே சட்டம் இப்படித்தான் இருக்கும்,
 
விரைந்து முடிவெடுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் ...பாவம் அப்பாவிகள் அவர்களாவது பிழைத்து கொள்ளட்டுமே...

Saturday, September 24, 2011

பதிவர்களே, நீங்க சுரண்டி கிழிச்சது போதும், நிப்பாட்டிக்கோங்க

ஆட்டை கடிச்சி, மாட்டை கடிச்சி கடைசியிலே மனுசனையே கடிக்கிறானே னு யோசிக்கிறீங்களா? என்ன செய்யுறது நல்லது செய்யுறதுக்கு என்ன வேஷம் போட்டாலும் தப்பில்லை னு என் மச்சான் நேத்து போன்ல சொன்னாரு..

அதான் உண்மையை பகீரங்கமா போட்டு உடைச்சிரலாமுனு இருக்கேன்..

அரசியல்வாதி அடிக்கிறது, சுரண்டறது எல்லாம் அவன் குடும்பத்திற்கும், வாரிசுக்கும் நல்ல யோகத்தை கொடுக்குது, ...ஆனா நாம சுரண்டுறது கடைசியிலே நமக்கே ஆப்பாயிடுதே...இது ஏன் உங்களுக்கு புரியவே மாட்டேங்குது....
சொன்னா கேளுங்க..இனிமே நீங்க சுரண்டுரதை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது, இதனால எனக்கு என்ன ஆனாலும் சரி..அதை பற்றி நான் கவலைப்படலை. எனக்கு ரெண்டுல ஒன்னு இன்னிக்கு தெரிஞ்சாகனும். நீங்க இனிமே சுரண்ட மாட்டேன்னு எனக்கு சொல்லுங்க...

இந்த செல் போன் வந்த பிறகு செல் போன்ல நிறைய தொந்திரவு வந்துச்சி, அடுத்தது நம்ம சொக்காரனுக்கு பேசுறதுக்கு டாப் - அப், பாட்டம் - டவுன் எல்லாம் போடுறதுக்கு முன்னாடி எல்லாம் ஒரு கடையிலே போய் நின்னு அவன்கிட்டே உங்க நம்பரை சொல்லித்தான் அமௌன்ட் ஏத்தணும்..ஆனா இப்போ பஸ் டிக்கெட்டுக்கு பாதி சைஸ்ல இருக்கிற ஒரு அட்டைல நூறு ரூவாய் க்கும், ஆயிரம் ரூவாய் க்கும் கூட அமௌன்ட் ரீ-சார்ஜ் பண்ணிக்கலாம்...

அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் னு யோசிக்கிறீங்களா? இருக்கு. அந்த ரீ-சார்ஜ் கார்ட்ல ஒரு வெள்ளி நிறப் பட்டை ஒன்னு இருக்கும், அதுக்கு உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அதை தட்டினா உங்களுக்கு ரீ-சார்ஜ் ஆகிடும்.


இப்போ விஷயம் என்னானா? அந்த வெள்ளிநிறப் பட்டை எதுல செய்யுறாங்க னு தெரியுமா? வெள்ளி நைட்ரோ ஆக்சைட், இதை சுரண்டினா என்ன ஆகும் தெரியுமா? நகம் வழியா உள்ளே நுழைஞ்சு தோல் சரும புற்று நோயை உருவாக்கும். உடனே எல்லாம் நடக்காது...கொஞ்சம் கொஞ்சமா செயல்பட்டு கடைசியிலே இந்த புற்று நோயை உருவாக்கிடும்.

சிலர் சொல்வாங்க என் பையன் தண்ணியடிக்க மாட்டான், தம்மு அடிக்க மாட்டான்..ஏன் பெப்சி, கோக் கூட குடிக்க மாட்டான், பொண்ணுங்களை ஏறெடுத்து பார்க்க மாட்டான்...ஆனா அவனுக்கு போய் இப்படி கேன்சர் வந்திடுச்சே னு ரொம்ப பீல் பண்ணுவாங்க..ஒன்னு தெரிஞ்சிக்கோங்க..கேன்சர் கிருமி எப்படி வேணுமினாலும் வரும்..அதுல இதுவும் ஒன்னு...

சரி அப்போ என் கேள் பிரண்டு கிட்டே நான் டெய்லி பேசணுமே..அதுக்கு தினமும் டாப்- அப் பண்ணினாத்தான் பேச முடியும் னு நீங்க நினைச்சீங்கன்னா எதுக்கு நேரிடையா சுரண்டுறீங்க, 

   அரசியல்வாதிங்க என்ன நேரிடையாவா சுரண்டுறாங்க, ஏதாவது பினாமிய வச்சுத்தானே  சுரண்டுவாங்க...

நாம ஏன் நம்ம விரலை வச்சு சுரண்டனும்..ஒரு பேனா, குச்சி, காசு, வண்டி சாவி இப்படி எதையாவது வச்சு சுரண்டுங்க...

அதுனால பதிவுலக நண்பர்களே...இனிமே சுரண்டாதீங்க ப்ளீஸ்..

Monday, September 19, 2011

யார் இவர்கள்?

   
கோயிலுக்குள் 

சென்று வந்த சாம்பல் திருநீறானது !!!

கற்பூரம் காற்றாகி போனது !!!

வெளியே குழாயடியில் பிடித்த 
தண்ணீர் தீர்த்தமானது !!!  

வழக்கமாய் செய்த சோறு
பிரசாதமானது !!!

இவ்   வனைத்தையும் 
எடுத்து சென்ற மனிதன் மட்டும்
மனிதனாகவே வந்தான் !!!????!!!! 


 

Thursday, September 8, 2011

கறுப்பு தினம் புதன்கிழமை


செப்டம்பர் 7 2011, இந்தியாவின் தலைநகரத்தில் அதுவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நீதிமன்றத்தின் முன் நடந்தேறி இருக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி  எண்ணிக்கை  12 ஐ தொட்டு இருக்கின்றது. காயம் பெற்றவர்கள் எண்ணிக்கை 60 ஐ தொட்டு விட்டது. இந்த சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பொது மக்கள் யாரையும் அச்சமடையத் தேவை இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். தனது கண் எதிரே நடந்த குற்றங்களையும், கொலைகளையும் பார்த்த பிறகு எந்த சாதாரண குடிமகனுக்கும் மனதினில் பயம் வரத்தான் செய்யும். மேலும் எல்லோரும் அமைதி கொள்ளல் வேண்டும் என்று வேறு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார். எப்படி அந்த உயிர்களை இழந்த குடும்பங்களால் அமைதியாக இருக்க முடியும்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் அமைதியாகவே இருந்தீர்களா? இன்று வரை அதற்க்கு துணை நின்றவர்கள் என்று கூறி வருவோர், போவோர் எல்லாரையும் தண்டிக்கத் தானே துடிக்கின்றீர்கள். உணர்ச்சிகள் , உணர்வுகள் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, தனது உறவுகளை பறிகொடுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளல் வேண்டும்., மேலும் எந்தெந்த துறைக்கு எந்தெந்த ஆள் பொருத்தமோ அவர்களைத் தான் அந்த பதவியில் உட்கார வைக்க வேண்டும். நாட்டின் உள்துறை அமைச்சர் பதவி என்பது ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர் அல்லது லெப்டினன்ட் கர்னலையே அதற்க்கு தக்கவாறு அமர வைக்க வேண்டும்.,(உண்மையிலேயே தேசத்தின் மீது பக்தி இருந்தால் எந்த கட்சியாக இருந்தாலும் சரி).

ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்புகள் தவறாமல் நடக்கின்றது. நடந்து முடிந்ததும் வழக்கமாய் சொல்லும் வசனங்கள்தான் இவை. இதை கேட்டு கேட்டு காதெல்லாம் ரத்தம் வடிகின்றது. அவர்களும் சளைக்காமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அது ஏன் என்றே புரியவில்லை.

புது தில்லி செயற்கையான தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பிறகு இயற்கை அச்சுறுத்தலும் சேர்ந்து கொண்டு விட்டது. இரவு 11 .28 கு 4 .2  ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது.

வரிசையாய் அதிர்ச்சி செய்திகள் வெளிவரும்போது நம் தமிழகத்தில் நாங்குநேரி கைலாசனாதபுரம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 200 அடி ஆழம் கொண்டஆழ்துளை கிணற்றில் சிக்கிய நான்கு வயது சிறுவன் சுதர்சன் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப் பட்டான்.

அவனை இழந்து வாடும் அந்த உறவுகளுக்கு எங்களது கண்ணீரை காநிக்கையாகுகின்றோம். அது மட்டுமல்லாமல் அன்று முழுவதும் அந்த சிறுவனை மீட்க போராடிய அனைத்து தோழர்களுக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றது. இதை தடுக்கும் வண்ணம் யாரும் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

ஏன் இதற்கென்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு துளை போடும் இயந்திரம் நிரந்தரமாக நிறுத்தி வைக்க கூடாது. அந்த பாறைகளை கையால் உடைத்து எடுக்க முயற்சித்ததால்தான் 15 மணி நேரம் ஆகி இருக்கின்றது. இப்படி இந்த வார புதன் கிழமை இந்தியர்களுக்கும்,. தமிழர்களுக்கும் கறுப்பு தினமாய் மாறி விட்டது.

அது ஏன் ஒவ்வொரு முறையும் மன்மோகன் சிங் வெளிநாடு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளும்போதெல்லாம் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று யோசிக்க வேண்டி இருக்கின்றது. சம்பவம் நடந்த போது நான் நாட்டினில் இல்லை என்று பிறகாலத்தில் சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்ற எண்ணமா?

அது மட்டும் ஏன் என்று புரியவில்லை?