பங்காளிங்க..

Tuesday, August 29, 2017

தரைமட்டமான அதிமுக!

எம்ஜிஆர் தொடங்கிய மாபெரும் இயக்கம், இன்று தரைமட்டமானது! 
 ஒரு மாபெரும் இமயம் சரிந்து போனது, சரிந்து போன மாதம் யாருக்குமே தெரியாது! இந்த நாளில் இறந்தார் என்று யாரோ சொன்னார்கள், கேட்டுவிட்டு அதையே இறந்த நாளாக துக்கம் அனுஷ்டித்து வருகிறது, தமிழகம்....

அம்மாவிற்கு பிறகு அதிமுகவில் இருக்கும் ஒருவனுக்கு கூட கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை, பதவியை தக்க வைத்து கொள்ள ஒவ்வொரு லாட்ஜாக, ஒவ்வொரு ரிசார்ட்டாக சென்று கொண்டிருக்கிறான் என்பதே நிதர்சன உண்மை...

இந்திய பிரதமரில் இருந்து, தமிழக ஆளுநர் வரை யாருமே பார்க்க முடியாத அளவிற்கு அப்படி என்ன வியாதி அந்தம்மாவிற்கு! எதுவுமே நம்ப முடியாத தகவலாகி போய் விட்டதே!


அந்த அம்மா உயிரோடு இருக்கும் வரை, திரையுலகில் சத்தமே இல்லாமல் பஞ்ச் டயலாக் பேசியவர்கள் எல்லோரும் இன்று சமூக வலைத்தளங்களில் பஞ்ச் டயலாக் பேசி வருகின்றார்கள்.

அந்த அம்மா, பூரண குணமடைந்து விட்டார்கள் என்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாய்ஸ் மட்டும் வந்தது, இதுவரை பதில் இல்லை, உன்னை ஆள வேண்டாம் என்றுதானே சொன்னோம், வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே என்ற வசனத்தின் மூலம் தம்மை நல்லவர் என்று அடையாள படுத்திக்கொண்டு விட்டது எதிர்க்கட்சி.

தமிழ் நாட்டில் இதுவரை ஐந்தாவது அணியாக வந்தவர்கள் இன்று வீதிக்கு வீதி உலா வருகின்றார்கள், ஒரு மாநிலத்திற்குள் நுழைய முடியாத ஒரு பிரதமர் இந்த நாட்டிற்கு தேவையா? அவருக்கு துணிச்சல் இல்லையா? அம்மாவின் மரணத்தின் உண்மை கதை பின்னணி என்ன?

யார் பார்த்தாலும் தொற்று பரவி விடும் என்று சொன்னார்கள், இன்று யாரும் பார்க்காமல் எப்படி தொற்று பரவியது? மருத்துவமனையில் நுழைந்த நாளில் இருந்து இன்று வரை உள்ள ரிப்போர்ட்டை இன்னும் வெளியிடாதது ஏன்? என்று பல, பல கேள்விகள் மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றது?

மருத்துவமனை கொடுத்த பதில்களை ஏற்க முடியவில்லையே! ஒரு முதலமைச்சருக்கே இந்த கதி எனில் பாமரனின், சாமானியனின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் கொடுத்திட முடியும்?

நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டு கேவலப்பட்ட ஜென்மங்களாய் நம் முன்னாடி நிற்கின்றார்கள், தெர்மோகோலால் தண்ணீரை மூடும் அதிமேதாவிகள் அமைச்சர்களாய் உலா வரும் தமிழகம்! வெட்கக்கேடான விஷயம்...

எடப்பாடி முதலமைச்சர் ஆனதும், ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வைக்கப்படும் என்கிறார், இப்போதும் அதில் மாற்று கருத்து இருக்கிறதா? நீதி விசாரணை இருக்குமா?

இத்தனை ஆண்டு காலமாய் நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை, நாங்கள் நினைத்திருந்தால் அம்மாவுடன் இருந்த அன்றே எங்களது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவில் பதவிகள் பெற்று இருப்போம் என்று சசிகலா சொல்கிறார்,

ஏன் அன்றே பெற்று இருக்க வேண்டியதுதானே, அன்று பதவி பெறப்படவில்லையா? அல்லது பதவி கொடுக்கப்படவில்லையா? எது நிஜம்? அந்த பதவிகள் பெறப்படாமலே இவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது?

இன்றும் ஒரு சிலர் தமிழகத்தில் அதிமுக விசுவாசிகள் என்று சொல்பவர்கள், அம்மா, இருந்தவரை அம்மா, அம்மா என்று நடித்தார்கள், அவரின் மறைவிற்கு பிறகு சின்னம்மா, சின்னம்மா என்று அழைத்தார்கள், சின்னம்மா ஜெயிலுக்குள் போனதும் இப்போது டிடிவி தினகரன் என்று அழைக்கிறார்கள்?

ஒரு கோடி தொண்டர்களில் இவர்களை விட்டால் அதிமுகவில் இவர்கள் நால்வரைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லையா? எத்தனை, எத்தனையோ வழக்குகள்? எத்தனை, எத்தனையோ விவாதங்கள்?

ஒவ்வொரு ஊடகமும் தனது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள நடத்தும் விவாதங்கள், அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன...

ஜிஎஸ்டி கொள்கையை எதிர்த்து அந்த சட்டம் நிறைவேறாமல் தடுத்து வைத்திருந்தவர் அம்மா, ஆனால் அந்த சட்டம் நிறைவேறுவதற்கு உடன்கட்டை ஏறியவர்கள் அம்மாவின் விசுவாசத்தையும் சேர்த்து அம்மாவோடு குழி தோண்டி புதைத்து விட்டார்கள்,.

சரியான தலைமை இல்லாமல் தகிடுதத்தம் போடும் அரசாங்கம், எதிர்க்கட்சி சட்டையை கிழித்து கொண்டு நடத்தும் அசிங்கங்கள், அருவருப்பாய் உள்ளது தமிழக அரசியல்....

யாரும் எக்கேடு கெட்டு போங்கள், நாங்கள் நடத்துகிறோம் பிக் பாஸ் என்ற கேலிக்கூத்து, அடுத்தவர் அந்தரங்க அறைக்குள் 30 கேமிராக்கள் வைத்து படம் பிடிக்கும் கூத்துக்கள்...

அவர்களின் ஆடைகள் கலாச்சார சீர்கேடுகள் என்று தமிழகத்தை எல்லோராலும் எள்ளி நகையாட ச் செய்யும் அசிங்கங்கள்...இதுதான் இன்றைய தமிழகம்!

இது எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு, மக்களின் புரட்சி, சகிக்க முடியவில்லை இவர்களது கூத்துக்கள்! ஏதாவது ஒன்று ஏற்று கொள்ள முடிகின்றதா?

போட்டிபோட்டு கொண்டு நடத்தும் நகைச்சுவை அரசியல் கலாட்டாக்கள்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று அசிங்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் திருடர்கள் முன்னேற்ற கழகமாக மாறி உள்ளது வெட்கக்கேடானது!

உண்மை உலகிற்கு தெரியுமா? அல்லது அம்மாவின் மரணத்தை போலவே அனைத்து நீதிகளும் குழிதோண்டி புதைக்கப்படுமா?

அம்மாவின் பிணத்தின் மீது நாடகம், பிணத்தை வைத்து நாடகம் அரங்கேற்றப்படுகின்றது! வெட்கக்கேடானது தமிழகம்! தலைகுனிந்து நிற்கிறது, தமிழகம்! 

புஷ்பா சசிகலா வின் பிரச்சினைகளில் தொடங்கியது, இன்று அம்மாவின் சமாதியில் முடிந்துள்ளது, முதன்முதலில் ஒரு பெண் எதிர்க்க தொடங்க, அம்மாவின் வேதா இல்லத்தில் என்ன நடந்தது? அப்பல்லோவில் என்ன நடந்தது? 

அம்மாவின் போயஸ் தோட்டத்து காவலாளி கொலை செய்யப்பட்டு விட்டார், விசாரணை என்னவாயிற்று? அம்மாவிடம் பணிபுரிந்த பெண்கள் எங்கே சென்றார்கள்? உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர் பிணமாகத்தானே வீடு  திரும்பினார்? எம்பால்மிங் ஏன் செய்யப்பட்டது, இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்? எதற்குமே பதில் இல்லையே! 

அம்மாவின் புகைப்படத்தை வைத்து கொண்டும், அம்மாவின் சமாதியை வைத்து கொண்டும் அரசியல் செய்யும் கீழ்த்தர அரசியல்வாதிகள், அதிமுகவை வைத்து அரசியல் செய்யும் கீழ்த்தர ஊடகங்கள்! 

தமிழக மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை உரிமைகள் என்னவாயிற்று? 
அய்யகோ! இமயம் சரிந்ததே! ஒன்று மட்டும் உறுதி! டாஸ்மாக் கடைகளை மூடிய வேகத்தில் திறந்திருக்கிறார்கள்..

டாஸ்மாக்கில் தாலி இழந்த பெண்களின் சாபம்தான் கட்சியே இல்லாமல் சீர்குலைந்து நிற்கிறது!  தமிழக மக்களுக்கு விடிவு காலம் எப்போது? 
- இது ஒரு சாமானியனின் குரல் 











Monday, August 21, 2017

மாட்டுக்கு கொடுத்த மரியாதைய விவசாயிக்கும் கொடுங்கப்பா!

வணக்கம் இணையதள மற்றும் வலைப்பூ நண்பர்களே! 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களோடு நானும் இணைகின்றேன். காலச்சக்கிரத்தின் கோலம், சில பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி தவித்து தற்போது மீண்டும் இச்சமுதாயத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ளேன். 

எத்தனையோ நாட்கள் எனது வலைப்பூவை திறந்து பார்த்து, ச்சே! எப்படியெல்லாமோ காலம் கடந்து விட்டதே என்று எனக்குள் நானே சபித்து கொள்வேன். 

இன்று சமுதாயம், நாடு மற்றும் சட்டம், நீதி அனைத்துமே செத்துப் போய்தான் இருக்கிறது. தமிழ் நாட்டை ஆளுவது யார், மாநிலமா? இல்லை மத்தியமா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மக்களுக்குள் உருவாகித்தான் இருக்கிறது. 

மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் இழப்பு எவ்வளவு மோசமானது என்பதை மக்கள் இன்று நன்கு உணர்ந்திருப்பார்கள். அவரின் ஆளுமையில் அவரை திமிரு பிடித்தவர், ஆணவம் கொண்டவர், தலைக்கனம்  கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் இன்று அந்த அம்மா இருந்திருந்தா இவனுங்க இப்படி ஆட்டம் போடுவானுங்களா, வாயைத்திறந்து பேசுவானுங்களா என்று வாய் விட்டே அறைகூவல் விடுத்து கொண்டிருக்கின்றார்கள். தொண்டனுக்கு இன்றும் தெரியவில்லை, யார் உண்மையான அம்மா விசுவாசி என்று, யாரை தலைமையாக ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை,

எதிர்க்கட்சியான திமுகவும் இன்று தலைமை இல்லாமல் சீரழிந்து போயிதான் இருக்கிறது. எத்தனையோ புரட்சிகள், போராட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், இலவு காத்த கிளி போல இங்குமங்கும் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். 

நாடே நாசமாய் போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில் பிக் பாஸ் என்ற டீவி தொடர் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது, வெட்கக்கேடான விஷயம்! ஊடகங்கள் எல்லாமே வெட்கி தலைகுனிய வேண்டிய நேரம் இது, அஜித்தின் திரைப்படமும், விஜயின் திரைப்படமும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது. 

2ஜி, காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி ஊழல், கிரானைட் ஊழல், விஜய் மல்லையா ஊழல், கண்டெய்னர் லாரி கோடிக்கணக்கான பணம் விசாரணைகள் என்னவானது?   

மக்களை மறக்கடிக்க கொண்டு வந்ததே, 500 ரூவாய், 1000 ரூபாய் பண மாற்றம், ஜிஎஸ்டி ஆகியவையே, சாமானியன் இன்று வரை சாமானியனாகவே இருக்கின்றான், நாட்டை ஆக்கப்பூர்வமான கொண்டு செல்ல ஒருவனும் சிந்திக்கவே இல்லை! அதிமுகவில் உள்ள இரு அணிகள் இணையுமா? என்ற கேள்விகளை தினமும் டிஆர்பி க்காக விசாரிக்கும் ஊடகங்கள், வெட்கக்கேடான விஷயங்கள்! 

அம்மாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக 4 அணிகளாக உருவெடுத்திருப்பது, அந்த அம்மாவின் மரணத்தை வேண்டியிருப்பார்களோ என்ற சந்தேகத்தை மக்களிடம் கிளப்பி வருகிறது. 

பணம், பதவி மோகம் இல்லாத ஒரு தலைவனை இனி எப்போது நாம் காணப் போகின்றோம். ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் கேவலங்கள் எப்போது நாட்டை விட்டு செல்ல போகின்றது?

கதிராமமங்கலம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எங்கே போனது? நாடு அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக வோ ஆட்சியை பிடிக்கும் வரை அவர்களை கைது செய்வேன், இவர்களை கைது செய்வேன் என்று ஊருக்கு ஊர் போய் பிச்சை எடுத்து பதவி பெற்றார்கள். இன்று பலகோடி கொள்ளையடித்த விஜய் மல்லையா கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றான். அவனை கைது செய்ய வக்கில்லாமல், அலைந்து கொண்டிருக்கிறது. கார்ப்பொரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக மத்திய  அரசும்,மத்திய அரசின் கைக்கூலியாக மாநில அரசும் இழுபறியில் இருக்கிறது. 

திருநெல்வேலி நகரத்தில் பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளை தண்ணீர் எடுக்க தாரை வார்த்து கொண்டிருக்கும் அன்றைய தமிழக அரசு, இன்று அதற்கு எதிராக போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. 

மீத்தேன் வாயுதிட்டத்தை அறிமுக படுத்தி அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட இயக்கங்கள்தான் இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகிறது. மக்களை இன்னமும் கேனப்பயல் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்களே! என்ற கோபம் தலைக்கேறுகிறது. 

எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க, இங்கே நாற்காலிக்கு சண்டை போடும் நாதாரிகளை நினைத்தால் என்னவென்று சொல்ல? 

அம்மா இறந்த சந்தேகங்கள் ஆயிரம் இருக்க? ஏன் இளைஞர்கள் போராட்டம் செய்ய வில்லை என்று தெரியவில்லை! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் குரல் கொடுத்த இளைஞர்கள் ஏன் இந்த அம்மாவின் மரணத்தில் விசாரணைக்கு குரல் கொடுக்க வில்லை! 

அந்த அம்மா ஊழல் செய்ததாக இருக்கட்டும், ஆனால் நாட்டு மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் எதுவும் குறைவில்லையே! போகும் போது எதுவுமே கொண்டு போகப்போவதில்லை என்பதற்கு பணம் சேர்த்த முதலைகள் தெரிந்து கொள்ள வேண்டுமே! 

இது சாதாரண மரணம் அல்ல! கோடி ரூபாய் கையில்  பிணமாகத்தான் நம்மை விட்டு பிரிந்தார். மரண விளிம்பில் இருந்த அவரோடு யாருமே பேசவில்லை! யாரையுமே பேச விடவில்லை, ஒரு செய்தியின் உண்மை நிலை தெரியவில்லையெனில் ஆயிரமாயிரம் பொய் செய்திகள் பரவத்தான்  செய்யும்! அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உண்மைநிலை மக்களுக்கு தெரியவேண்டும்! 

தெரியுமா? இளைஞர்கள் இனியாவது விழித்து கொள்வார்களா? ஏதாவது ஒரு ஐடி நிறுவனம் விவசாயத்திற்கு, கதிராமமங்கலத்திற்கு, நெடுவாசலுக்கு குரல் கொடுக்குமா? அப்படி கொடுக்கும் போது அனைத்து ஐடி நிறுவனங்களும், இளைஞர்களும், இளைஞகளும் இணைவார்கள். 

சமுதாய பிரச்சனைகளை பேசும் ஊடகங்கள் என்று வெளிவரும் என்று உங்களைப்போலவே நானும் காத்திருக்கின்றேன். தமிழகத்தை சேர்ந்த ராணுவவீரன் வீரமரணம் செய்தி ஏழாவது பக்கத்தில் ஒரு குட்டி பெட்டி செய்தியாக வெளிவந்திருக்கிறது, முதல் பக்கத்தில் விவேகம் படத்தின் டீசரை 1 லட்சம் பேர் பார்த்தார்கள் என்று வெளிவந்திருப்பதே கேவலத்திற்குரிய விஷயமே!   

விடைகளே தெரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் நமக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறது! 

எப்போது கிடைக்கும் விடைகள்! ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கிடைத்த விடைகள் கூட மனிதனுக்கு நம் வாழ்வின் உயிர் விவசாயத்திற்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது...

விவசாயத்தை காப்போம் என்று வாட்சப்பில் லோகோ வைத்து விட்டால் நாம் போராளிகள் என்று அர்த்தம் கிடையாது. விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். சாமானியன் ஒருவன் வீட்டிற்காக, திருமணத்திற்காக, கல்விக்காக வாங்கிய கடனுக்கு, அவனது வீட்டை ஜப்தி செய்யும் வங்கிகள், கல்வி சான்றிதழை பறிமுதல் செய்யும் வங்கிகள், நகைகளை ஏலத்தில் விற்கும் வங்கிகள், விஜய் மல்லையாவின் கால்களை கழுவி விட்டது எப்படி? 

எப்படி அவனை வெளிநாட்டிற்கு தப்ப வைத்தார்கள்? எப்படி இன்று வரை தலைமறைவாக இருக்கின்றான்? மக்கள் சிந்திக்க வேண்டும்?