பங்காளிங்க..

Thursday, September 7, 2017

அனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1


தமிழர்கள், தமிழ் மாணவ, மாணவிகள்  சகோதரி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க போராடிக்கொண்டிருக்க, இது ஒரு உணர்வுபூர்வமான போராட்டமாக அமைந்த வேளையில், அந்த நேரத்திலும் சுகம் தேட அலையும் ஒரு ஆண் வர்க்கம், செயலற்று போய் இருக்கும் பெண் வர்க்கம்,

கூட்ட நெரிசலை தடுக்க வேண்டிய நேரத்தில் இவனது கைகள் எங்கே செல்கிறது, கொடுமையிலும் கொடுமை, இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களது இலக்கு போராட்டக்களம், அதே நேரத்தில் இந்த உதவி ஆணையர் ஜெயராமனும் இலக்கை நிர்ணயித்து விட்டான், தவறு என்று மன்னிப்பு கேட்டு விட்டால் நீதிமன்றமும், காவல்துறையும் மன்னித்து விடுமோ! அந்த உடையின் மதிப்பு தெரியாத இவன், இவனது பணிக்காலத்தில் இவன் எப்படி கற்பழிப்பு வழக்குகளை கையாண்டிருப்பான், இவன் எப்படி பெண்களுக்கெதிரான வழக்குகளில் வழக்குகளை கையாண்டிருப்பான் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக அமைகின்றது. 

இதை விட கேவலமான விஷயம் வேறு என்னவாக இருந்திருக்க முடியும்? நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஒரு ஐந்து நிமிட சுகம் வேண்டும் என்று காத்திருக்கும் பொறுக்கிகளுக்கு இன்னமும் காவல்துறை பதவி எதற்கு என்றுதான் புரியவில்லை, அவனை பணியிலிருந்து டிஸ்மிஸ்  செய்தாலும் தவறில்லையே! 

எவ்வளவு கீழ்த்தரமான விஷயம் இது, நம்மை சுற்றி ஆயிரம் கேமிராக்கள் இருக்கிறது என்று தெரியாமல் சேட்டை செய்யும் காமுகர்கள் இவர்கள்! 

இவருக்கு ஒரு பெண் மகள் இருந்தால் அவளது நிலைமை என்னவாகும் என்பது அந்த தாயிற்கே வெளிச்சம்...தான் ஒரு உயரதிகாரி என்பதால் அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது பலநாள் ஆசையை அன்று தீர்த்து கொண்டாரா, சமயம் பார்த்து காத்திருந்தாரா? அது அவரது மனசாட்சிக்கே வெளிச்சம். 

இவர் மட்டுமல்ல இன்றும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் பல்லை இளித்து வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு என்றுதான் உலகம் நகர்கிறது. எல்லா பெண்களையும் சொல்லவில்லை, எல்லா ஆண்களையும் சொல்லவில்லை, 

ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் முதலாளிகள்  கண்ணுக்கு லட்சணமாய் மனைவி இருந்தாலும், அலுவலகத்தில் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்கின்றார்கள். அவள் சொன்னால் அலுவலகத்தில் எதுவும் நடக்கும் என்பது போல ஒரு மாயை தோன்ற, அன்றிலிருந்து மற்ற ஊழியர்களிடம் இருந்து அந்த பெண் மட்டும் ஒதுக்கி வைக்கப்படுகின்றாள். தானும் ஒரு சராசரி பெண்ணே, தனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதை மறந்து அவளை மட்டும் சமுதாயமும், அவர்களை சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களும் அந்த பெண்ணை ஒதுக்கியே விடுவார்கள். 

குடும்ப சூழ்நிலை, முதலாளிகளின் இச்சைகளுக்கு தன்னை பலிகடா ஆக்கி கொள்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் என்பதே இல்லாமல் ஒளியற்று போய் நிர்கதியாகி நிற்கின்றார்கள். 

கடைசிவரை அவள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில், உள்ளேயும் சக ஊழியர்களோடு வேலை  செய்ய முடியாமல் கூனிக்குறுகி போகின்றாள், அனுபவித்தவன் சந்தோசமாக திரிவான், ஆனால் அனுபவிக்கப்பட்டவள் கடைசி வரை களங்கத்தோடு அவதிப்பட்டு செல்வாள். 

நம்மை நம்பி வந்தவளை நாம் சீரழித்து விட்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாத, கவலைப்படாத ஜென்மங்கள் இருப்பதால்தான்  இந்த மாதிரியான பெண்களுக்கெதிரான அநீதிகள் நடந்தேறி கொண்டிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த மாதிரியான ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் அதிபர்கள்  ஏழை பெண்கள், விதவைகள், அனாதைகள், விவாகரத்து பெற்றவர்கள் என்று தேடிப்பிடித்து வேலைக்கமர்த்துகின்றார்கள். வெளியே இருப்பவர்களின் பார்வைக்கு, மிக நல்லவர்கள், பாவப்பட்ட ஜென்மங்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றார் என்று சொல்வார்கள், சொல்ல வைப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் நடக்கும் பெண்களுக்கெதிரான அநீதிகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது. 

ஏன், இப்படி செயகிண்றீர்கள் என்று சக ஊழியர்கள் கேட்டால், எனக்கு திராணி இருக்கிறது, செய்கின்றேன், என்று சொல்வார்கள். எது திராணி, கையாலாகாத பெண்களிடம் உங்கள் ஆண்மையை காட்டுவதா திராணி? இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வேலியே வேலியை மேய்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் அந்த காணொளி! வாட்ஸ்அப்பில் பரவுகிறது....காவல்துறையும், நீதித்துறையும் இன்னும் ஏன் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது, எதற்கு தயக்கம் காட்டுகின்றது என்று தெரியவில்லை!  

அனிதா என்ற சகோதரி ஒரு காமுகனை சமுதாயத்திற்கு காட்டி விட்டு சென்றிருக்கிறாள்!   

என்றுதான் எங்கள் சகோதரிகளுக்கு விடுதலை கிடைக்குமோ! 

அம்மாவின் சமாதிக்கருகே உனக்கு ஒரு சமாதி வைத்தாலும் தவறில்லை, 

நீட் தேர்விற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்தவரும் மண்ணுக்குள்ளே,

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவருக்கும்  இன்று மண்ணுக்குள்ளே! 
                                          

நீட் என்னும் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்தது யார் என்று நான் இனி சொல்லித்தெரிய வேண்டாம்! 

 

 நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்...

ஏக்கத்துடன் உங்களில் ஒருவன்! 




No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...